இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (15) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள பல செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் காணொளி முலம் இடம் பெற்ற கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் போது அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோபால் பாக்லேக்கு எடுத்து கூறியுள்ளார்.
பாடசாலைகளின் நீர் தேவை, சுகாதார படிமுறைகளின் அவசியம், மழை நீரை சேமிப்பது மற்றும் கழிவுகளை பசளையாக்குதல் உள்ளிட்ட இரு நாடுகளுடனும் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து இந்திய தூதுவர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையில் உலர் வலய கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீருக்காக பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய பிரதமர் இந்த பிரச்சினை குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் கேட்டுள்ளார்.