இலங்கை அணிசேரா நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அரசு அறிவிப்பு!

0
22

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கை அணிசேரா நிலைப்பாட்டை கடைபிடிப்பதுடன் இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் மோதல்களில் நாடு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாம் இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியல் பிரச்சினைகளில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்த அமைச்சர், எமது இறையாண்மையைக் காத்துக்கொண்டு அணிசேரா நிலைப்பாட்டைப் பின்பற்றுவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர், எமது மண்ணை, நீர்நிலைகள் மற்றும் வான்வெளியை மற்றொரு நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். கடந்த காலங்களில் இதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். பதற்றங்களைத் தணிப்பது, பிராந்திய அமைதியைப் பாதுகாப்பது மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதே எமது ஈடுபாட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் நாம் அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ போவதில்லை. மேலும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் ஆதரிக்க நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.