அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203ஆவது கொடியேற்ற விழா திங்கட்கிழமை ஆரம்பமானது.
உலமாக்கள், பக்கீர் ஜமா அத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.
கொடியேற்றிய தினமான திங்கட்கிழமையிலிருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமா அத்தினரின் புனித ரிபா ஈ ராதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்க தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
கொடியேற்ற நிகழ்வில் அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.