இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு , விவசாய அமைச்சு , உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து இன்றைய சந்திப்பின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.ஏற்கனவே இலங்கையில் உள்ளுர் சந்தையில் முட்டை விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.இதனிடையே, கடந்த வாரம், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.1,250க்கு விற்பனை செய்ய, கோழித் தொழில் சங்கம் ஒப்புக்கொண்டது.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 91 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படாவிட்டால், நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், 3.42 மில்லியனுக்கும் அதிகமான குஞ்சுகள் பண்ணைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், டிசம்பரில் முட்டை உற்பத்தி வேகமாக அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக முட்டையின் விலை ரூபா 30 மற்றும் 35. வரை குறையும் என்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.கைத்தொழிலைப் பாதுகாப்பதுடன், நுகர்வோரின் நலன்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.