தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலை – ஆளுநர் கவலை

0
29

தமிழர்களுக்கு உரித்தான பண்பாடு, கலாசாரம் என்பன தடம்மாறிச் செல்லும் அதேவேளை, தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எந்த நிறுவனத்தினமும், அமைப்பினதும் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்தின் ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றது என்பதற்கு திருமறைக் கலாமன்றம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஆளுநர் கூறினார்.

திருமறைக் கலாமன்ற தினமும், வைரவிழா ஆண்டின் ஆரம்பமும் கலைத்தூது கலையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், திருமறைக் கலாமன்றத்தின் நிகழ்வுகளை நான் தவறவிடுவதில்லை. திருமறைக் கலாமன்றத்தின் எந்தவொரு நிகழ்வும் தரமானதாகவும் அதன் தனித்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கும்.

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுநர் மரியசேவியர் அடிகளாரின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும்தான், இந்த நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணம்.

மரியசேவியர் அடிகளாரின் நல்ல எண்ணமும், சிந்தனையும்தான் இந்த நிறுவனத்தை இன்று விரிவாக்கி வளர்த்துவிட்டிருக்கின்றது.

நல்ல எண்ணத்துடனும் சிந்தனையுடனும் எதை ஆரம்பித்தாலும் அது வெற்றியிலேயே முடிவடையும். அதற்கு சிறப்பான உதாரணம் இது.
மரியசேவியர் அடிகளார் மறைந்த பின்பும் திருமறைக் கலாமன்றத்தினர் தரமான ஆற்றுகைகளை எமது சமூகத்துக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய எமது சமூகம் பண்பாடுகளை மறந்துகொண்டுபோகின்றது. மனிதாபிமானம் என்பது இல்லாமல் போகின்றது. தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கின்றது.

தமிழர்களுக்கு உரித்தான பண்பாடு, கலாசாரம் என்பன தடம்மாறிச் செல்லும் இந்தச் சூழலில் அதைக்கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு திருமறைக் கலாமன்றம் போன்ற அமைப்புகளுக்கு உண்டு.

திருமறைக் கலாமன்றம் வெறுமனே கலைகளைப் பாதுகாப்பது மாத்திரமல்லாது, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அது பாராட்டுக்குரியது. இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா. சுதர்சன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கலைஞர்களுக்கு ஆளுநர் விருது வழங்கி கௌரவித்தார்.