திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று மே 22 ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த இரண்டு விண்ணப்பங்களும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் விண்ணப்பங்கள் தொடர்பான பல ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் கோரினார்.அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மீது குற்றம் சுமத்த உத்தரவிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளரும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் கோரியுள்ளனர்.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் புவனேக அலுவிஹாரே, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உச்ச நீதிமன்றத்தின் அமர்வில் பங்கேற்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளருக்காக உபுல் ஜயசூரிய பி.சி.யுடன் ஜெஃப்ரி அழகரத்தினம் ஆஜரானார். விஜித ஹேரத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.திறைசேரி செயலாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா மற்றும் ஹபீல் பாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.