மட்டக்களப்பு நகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சி தெரிவித்தார்.
குறித்த வீதியில் மதுபானசாலை ஒன்றிற்கு ஆருகில் வீதி ஓரத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீதிமன்ற உத்தரவை பெற்று மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.