மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிகளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது.
கனமழையால் மலேசியாவின் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டொலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, தெற்கு தாய்லாந்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட 491 இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிறது. ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.