“மாவடிப்பள்ளியில் விபத்துகளை தவிர்க்கவலுவான வீதித் தடுப்புகள் வேண்டும்”

0
19

அம்பாறை மாவட்டம் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வலுவான தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க குறித்த பிரதேசங்களில் வீதிப் பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்துவதுடன் அகலமாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சிறீ லங்கா ஜனநாயக கட்சி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை தவிசாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

“அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாவடிப்பள்ளி, கிட்டங்கி ஆகிய இரு இடங்களில் மாவடிப்பள்ளியில் 6 சிறுவர்கள் உட்பட 8 பேரும் மற்றும் கிட்டங்கியில் ஒருவரும் உயிரிழந்தமை வருத்தமளிக்கும் ஒன்றாகும். இது போன்று அடிக்கடி குறித்த பிரதேசங்களில் உயிரிழப்புகள் இடம்பெறுவது வழமையாகி வருகிறது.

முக்கியமாக குறித்த இந்த இரண்டு இடங்களின் பாலங்கள் எதிர்காலத்தில் விபத்துகளையும், மரணத்தையும் தவிர்க்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும், ஒவ்வொரு இடத்தின் இருபுறமும் பாலத்தில் இருந்து வீதி வரை 500 மீற்றர் தூரத்துக்கு வலுவான தடுப்புகள் அமைப்பதுடன், வெள்ள அளவைக் குறிப்பதுடன், எதிர்காலத்தில் இப்பகுதி மற்றும் பிற பகுதிகளின் பயணிகளின் மரணங்கள் தவிர்க்கப்படும்.

தென்கிழக்கு பிராந்திய கடலோரப் பகுதியை முழு அம்பாறை மாவட்டம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இந்த வீதிகள் இணைக்கும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழை வெள்ளம் காரணமாக, இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது இரண்டு இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமான மரணத்துடன் நடைபெறுகின்றன.

எனவே, உங்கள் தொழில்நுட்ப பிரிவை கொண்டு இப்பகுதியின் செயல்பாட்டு சூழலை ஆய்வு செய்து, இரண்டு பாலங்களுக்கும் மிகவும் வலுவான தடுப்புகளை அமைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு வீதிப் பாதுகாப்பை ஏற்படுத்தும்போது நீர் வடிந்தோட இடையூறு இல்லாமல் இருப்பதுடன் எதிர்காலத்தில் இப்பகுதி பயணிகளின் விபத்து மற்றும் மரணத்தைத் தவிர்க்க முடியும் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணிகளின் நன்மை கருதியும், யானைத் தொல்லைகளை கவனத்தில் கொண்டும் சிறீ லங்கா ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் பலரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக அம்பாறை – காரைதீவு வீதியில் காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பிரமாண்ட ஒளியூட்டும் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.