2024இலிருந்து 2029வரை நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
2024 ஆம் ஆண்டில் நாம் மீண்டும் மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவோம். நாங்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள். எங்களுக்கு வேறு கட்சிகள் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டாட்சியை நாட்டிலிருந்து இல்லாது செய்தமைக்காக. ஆனால், அதேநேரம் 2024 ஆம் ஆண்டுவரை தான், நாம் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
2024 இலிருந்து 2029 வரை நாம் அவரை ஜனாதிபதியாக்கப் போவதில்லை. பொதுஜன பெரமுனவுடன் மட்டும், பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம். ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தோல்வியடைய வேண்டாம் என்றும் நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ என ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.