யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் இராசபாதையில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்தில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இன்று (12) காலையில் சுமார் 8 பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அத்தோடு கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.