ரஷ்ய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடன் தி.மு.க. எம். பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்கு நாட்கள் நீடித்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் ஜப்பான் சென்றனர். சிவசேனா எம்.பி. சிறீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினர் ஐக்கிய அமீரகத்துக்கு சென்றனர். இதேபோன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் புதுடில்லியிலிருந்து ரஷ்யா சென்றனர்.
இந்தக் குழுவினர் சுலோவேக்கியா, கிரீஸ், லட்வியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டுத் தலைவர்களிடம் ஒப்ரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு, ரஷ்ய அமைச்சர்கள், வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை குழு எடுத்துரைக்கிறது. நாளை சனிக்கிழமை ஸ்லோவேனியாவுக்குச் செல்வதற்கு முன்பு, இந்தக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளனர்.