நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையானக் காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியியான ஹிஷாலியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் நேற்றைய தினம் இருவரிடம் வாக்குமூலங்கள் பெறப்படடுள்ளன.
இச்சம்பவம் தொடர்பிலான நேரடி சாட்சியங்கள், தொலைபேசி சாட்சியங்கள், தொழில்நுட்ப சாச்சியங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினமும் இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
ஹிஷாலினிக்கு முன்பாக 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையானக் காலப்பகுதியில் டயகமை பகுதியைச் சேர்ந்த தரகரினூடாக 11 பெண்கள் குறித்த வீட்டுக்குப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஹிஷாலினி. மற்றுமொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் ரிஷாட் எம்.பியின் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களை தவிர மீதமுள்ள 8 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இறுதி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இவர்களில் 22 வயது யுவதி தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூலமளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ரிஷாட் எம்.பியின் மனைவியின் சகோதரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஒரு பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது அவர் ரிஷாட் எம்.பியின் மனைவியின் சகோதரரால் ஏழு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூலமளித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் ரிஷாட் எம்.பியின் வீட்டில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார். குறித்த பெண் தற்போது களனிய பிரதேசத்தில் பணியாற்றிவருகின்ற நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த பெண, ஹிஷாலினி மரணமடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.