யாழ்ப்பாணத்தில் யார் இப்போது றோவுடன் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதே மிகவும் கடினமான காரியமாக இருக்கின்றது. 134 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்ட – இராணுவ வல்லமையில் உலகில் நான்காவது நிலையில் கணிக்கப்படும் ஒரு நாடான இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் பெயர்தான் றோ. தமிழரின் விடுதலைப் போராட்டம், ஆயுத விடுதலைப் போராட்டமாக பரிணமிக்கத் தொடங்கிய காலத்தில், தோற்றம் கொண்ட அனைத்துப் பிரதான இயக்கங்களின் தலைமைகளும் இந்திய புலனாய்வு அமைப்பான றோவுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகளைப் பேணியே வந்தன. இது அன்றைய அரசியல் அரங்கிலிருந்த பலருக்கும் நன்கு தெரிந்த சங்கதி. ஆயுதப் போராட்டத்தில் பங்கு வகித்த பிரதான இயக்கங்களான விடுதலைப் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஐந்து இயக்கங்களும் றோவின் மேற்பார்வையில் பயிற்சியளிக்கப்பட்டவை. இது தொடர்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியரான அன்ரன் பாலசிங்கம் தனது ‘போரும் சமாதானமும்’ என்னும் நூலில் விபரித்திருக்கின்றார்.
இந்திய வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் றோவிற்கு பிரதான பங்குண்டு. இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. றோ என்னும் உளவு அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, இந்த நிலைமை இருக்கின்றது. ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையால், அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான இந்தியா அதிருப்தியடைந்தது. இந்த பின்னணியில்தான் இலங்கைப் பிரச்னையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. இந்தியாவின் தலையீடு இராணுவ ரீதியான தலையீடாக இருந்த காரணத்தினால்தான், இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களை கையாள்கின்ற ஓர் உளவு அமைப்பு என்னும் வகையில், றோவின் தலையீடும் அதிகளவில் இருந்தது. இது தொடர்பில் பல ஆய்வுகள் உண்டு. இந்த பின்புலத்தில்தான் தமிழ் அரசியல் சூழலில் சிலரை றோவின் முகவர்கள் என்று வர்ணிக்கும் ஒரு போக்கும் உருவாகியது.
விடுதலைப் புலிகளின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த மாத்தையா விவகாரம் இதில் மிகவும் பிரபல்யமானது. ஆனால், இதில் பலரும் அறியாதவொரு விடயமுண்டு. அதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சி. பி. ஐ. விசாரணைகளுக்கான பிரதம அதிகாரியாக இருந்த ஆர். என். ராகோத்தமன் எழுதியிருக்கும் “ஊழnளிசையஉல வழ முடைட சுயதiஎ புயனொi: குசழஅ வாந ஊடீஐ குடைநள” என்னும் நூலில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் இரண்டாம் நிலை தலைவருமான கேனல் கிட்டு, றோவின் உளவாளியாக தொழில்பட்டதாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்போது றோவின் இயக்குநராக இருந்த கௌரிசங்கர் வாஜ்பாய் இந்தத் தகவலைத் தெரிவித்தார் எனத் தனது நூலில் ராகோத்தமன் பதிவு செய்திருக்கின்றார். றோவுடனான தமிழ் தொடர்புகள் தொடர்பில் இப்படிப் பல கதைகள் உண்டு. ஆனால், இந்தக் கதைகளில் எந்தக் கதை உண்மை – எது பொய் என்பதை எப்போதுமே அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், ஓர் உளவுத்துறையின் விவகாரம் அந்த உளவுத் துறையால் பகிரங்கப்படுத்தபடாத வரையில், அனைத்துமே வெறும் ஊகங்களும் சந்தேகங்களும்தான்.
2009 இற்குப் பின்னர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே ‘றோ’ என்னும் சொல்லை அதிகமாக உச்சரித்திருக்கின்றனர். தங்களுடன் அரசியல் ரீதியில் முரண்படுபவர்களை, றோவின் முகவர்களாகக் காண்பிக்க முற்படும் போக்கும் அவர்களாலேயே தமிழ் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சுரேஷ் பிறேமச்சந்திரன், விக்னேஸ்வரன் இப்போது மணிவண்ணன் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான வரதராஜன் பார்த்தீபன் தனது ஊடக அறிக்கையில் தங்களை (மணியின் தரப்பு) ‘றோ’ என்று, முன்னணியின் தலைமை குற்றம்சாட்டியதாகத் தெரிவித்திருக்கின்றார். ஆனால், இந்த விடயம் பிறிதொரு புறமாக தமிழ் அரசியலில் காணப்படும் அறிவு குறைப்பாட்டை எடுத்துரைக்கும் அதேவேளை, தமிழ்த் தேசியவாதிகள் என்போரின் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
-ஆசிரியர்