மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் வள அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா நேற்று மாலை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடன் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு காணும் கலந்துரையாடலை மீனவ சங்க அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை கடற்றொழில் வள அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.
மீனவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதுடன் குறிப்பாக எரிபொருள் விடயம் தொடர்பாக துறைமுக முகாமையாளர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
துறைமுகத்திற்கு நாளாந்தம் மூன்று லோட் 19800 லீற்றர்,டீசல் மற்றும் ஒரு கிழமைக்கு மூன்று லோட் 19,800 லீற்றர் மண்ணெண்ணையும் கையிருப்பு இருந்தால் மட்டுமே பிரதேச மீனவர்களின் எரிபொருள் தேவையினை நிவர்த்தி செய்யமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயத்தை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் கிடைக்கின்ற அளவினைக் கொண்டே நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் எதிர்வரும் திங்கள் கிழமை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசுகிறேன் எனவும் பதிலளித்தார். அத்துடன் இதுவே நாட்டு நிலைமை என்றும் பதிலளித்தார்.
குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசாமில்,மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ்.நெக்டா நிறுவன உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் வாழச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் விஜிதரன் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.