ஒரு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள சிரேஷ்ட தமிழ் பத்திரிகையாளர்களுக்கு விருந்துபசாரமளித்திருந்தார் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியுள்ள சி.வி. விக்கினேஸ்வரன்.
விருந்துபசாரத்துடன் கூடிய இச்சந்திப்பு விக்கினேஸ்வரனின் பழைய கல்விக்கூடமான கொழும்பு ரோயல் கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள ‘மகாராஐh’ ரெஸ்டோரன்டில் இடம்பெற்றது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரான விக்கினேஸ்வரன், இலங்கை பாராளுமன்றுக்கு தெரிவான மூன்றாவது உயர்நீதிமன்ற நீதியரசராவார். அத்துடன் இரண்டாவது தமிழ் உயர்நீதிமன்ற நீதியரசருமாவார்.
சிங்களவரான நீதியரசர் ஐயபத்திரன, தமிழரான ரி. டபிள்யு ராஐரட்ணம் ஆகிய இருவருமே முன்பிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் எழுபதுகளில் இவர்கள் நியமன எம்.பிக்களாக நியமிக்கப்பட்டார்கள். பொதுத்தேர்தல் மூலமாக இவர்கள் தெரிவாகவில்லை.
ஆனால் விக்கினேஸ்வரன் மாகாணசபைக்கும் பின்னர் பாராளுமன்றுக்கும் தேர்தல்கள் மூலமாக தெரிவானவர்.
விக்கினேஸ்வரன் மிகுந்த உவகையோடு தமிழ் பத்திரிகையாளர்களுக்கான விருந்துபசாரத்தை நடத்தியிருந்தார்.
அவரது இரண்டாவது புதல்வர் தாமாகவே பத்திரிகையாளர்களுக்கு உணவு பரிமாறினார். இக்கட்டத்தில் பத்திரிகையாளர்கள் விக்கினேஸ்வரனின் பாராளுமன்ற கன்னிப்பேச்சைப்பற்றி அவரோடு அலசி உரையாடினர்.
இலங்கையில் தமிழர் பூர்வீகம் பற்றி விக்கினேஸ்வரன் தெரிவித்த ஆணித்தரமான கருத்துக்கள், சிங்கள –பௌத்த பேரினவாதிகளுக்கு ஒரு அறிவூட்டலாக இருந்ததையும் சுட்டிக்காட்டினர்.
அதேசமயம் சில பத்திரிகையாளர்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்தபோது விக்கினேஸ்வரன் தமது கடமைகளில் தோல்விகண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அப்போது தமக்கேயுரிய புன்முறுவலுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் போலன்றி நீதிபதிக்குரிய அமைதி, தன்னடக்கம் என்பவற்றோடு பேசப்பட்டவற்றை அவர் செவிமடுத்ததையே காணமுடிந்தது.
இந்த விருந்துபசாரத்தில் முன்னாள் செனட்டர் எஸ்.ஆர். கனகநாயகத்தின் புதல்வர் ஐனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் பங்குபற்றியிருந்தார்.
விக்கினேஸ்வரன் ஒரு கர்நாடக இசைப்பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. வீணை, சித்தார் போன்ற வாத்தியக்கருவிகளையும் மீட்டக்கூடியவர்.
கொழும்பு கம்பன் கழகத்தின் ஸ்தாபக பெருந்தலைவராக பல வருடங்கள் இருந்தவர். அப்போது இசை நிகழ்ச்சிகளில் பேசி அவர் பெற்ற பிரபல்யமே பின்னாளில் அவர் அரசியலில் ஈடுபடவும் முக்கியகாரணமாக இருந்தது.
விக்கினேஸ்வரன் நீதிபதியாக இருந்தபோது ஓய்வு நேரங்களில் வீணை மீட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டபோது இந்தியாவில் தாம் வீணையொன்றை வாங்கி இலங்கைக்கு கொண்டுவரும் போது ஏற்பட்ட அனுபவத்தையும் விக்கினேஸ்வரன் குறிப்பிடார்.
தாம் நீதிபதியாக இருந்தபோது தமிழகத்தில் வீணை ஒன்றை வாங்கியதாகவும், சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதை பரிசோதித்துவிட்டு, விக்கினேஸ்வரனிடம் உங்களுக்கு வீணையும் வாசிக்கத் தெரியுமா என்று கேட்டனராம்.
அப்போது அவர்களுக்கு பதிலளித்த விக்கினேஸ்வரன், ‘நான் பெரிய வீணை வித்துவானல்ல. ஆனால் வீணையை நன்கு வாசிப்பேன்’ என்று சென்னை சுங்க அதிகாரிகளுக்கு கூறியதாக சொன்னார்.
அப்படியானால் எமக்கு இந்த வீணையை வாசித்துக்காட்டுங்கள் என்று சுங்க அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
விக்கினேஸ்வரனும் மகிழ்ச்சியோடு இணங்கியவராக சுங்க அதிகாரிகளின் மேசைமீது வைத்தே அப்புதிய வீணையை மீட்டியுள்ளார்.
எப்போதுமே பிள்ளையார் சுழியோடு எதனையும் ஆரம்பிக்க வேண்டுமென்ற வழக்கமிருப்பதால், ‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற பிள்ளையாருக்குரிய தேவாரத்தை தாம் அப்புதிய வீணையில் மீட்டியதாக விக்கினேஸ்வரன் கூறினார்.
அத்துடன் தமது கைவிரல்களையும் அசைத்து தாம் எவ்வாறு அந்த வீணையை மீட்டியதாகவும் அன்று பத்திரிகையாளர்களுக்கு காண்பித்தார்.
விக்கினேஸ்வரனின் வீணைக்கதையைக்கேட்ட பத்திரிகையாளர்கள், இனிவரும் காலங்களில் ‘விக்கி ஐயாவின் வீணைக்கச்சேரி’ பாராளுமன்றத்தில் சூடுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறிச்சிரித்துக்கொண்டனர்.