வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 16.817 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நட்டஈடு கமநல காப்புறுதி சபையின் ஊடாக பொலன்னறுவை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 1397.2 ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ் பாதிப்பிற்காக 1160 விவசாயிகளுக்கு
16.817 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்படுகின்றது.
குறித்த நட்டஈடானது அடுத்த மாதம் 1ம் வாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 1160 ஏக்கர் அழிவடைந்துள்ளதாகவும், அதற்கான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.