அமைதியான போராட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு, அரசு மதிப்பளிக்க வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

0
119

அமைதியான போராட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையர்கள், பொருளாதார நெருக்கடியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக பாதிக்கப்பட்டனர். இதனால், பொது மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. உணவு விலை பண வீக்கம், ஒக்டோபரில் 85 சத வீதத்திற்கும் அதிகமாக இருந்தது. வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல இறக்குமதிகள் பற்றாக்குறையாகவோ அல்லது பெற முடியாததாகவோ இருந்தது. இலங்கை மக்கள் சனத்தொகையில் 28 சத வீதமானோர், உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டு, வறுமை விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அமைதியான போராட்டத்தை அரசாங்கம் ஒடுக்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர்ப்பாட்டங்களை நசுக்கியதுடன், மாணவர் செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு, இழிவான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். மீண்டும் பாரிய எதிர்ப்புக்கள் ஏற்பட்டால், பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதாகவும், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும், ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத அரசியல்வாதிகளிடம் இருந்து, தவறான நிர்வாகத்திற்கோ அல்லது ஊழலுக்கோ எதிரான நடவடிக்கைகளை, இலங்கையர்கள் எதிர்பார்க்க முடியாது.
எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, இலங்கையின் சர்வதேச பங்காளிகள், நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அத்தியாவசிய நடவடிக்கையாக, மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவசியம். என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.