இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில்
அரசாங்கத்திற்கும், சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை கல்முனையில் இடம்பெற்றது
கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஏ.சி அப்துல் அஸீஸ் தலைமையில், கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பிலான ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், 2022ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்களின் போது அரசியல்வாதிகளின் தூண்டுதலின் காரணமாக நடாத்தப்படுகின்ற வன்முறைகளால்தான் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதுடன், ஆர்ப்பாட்டங்களின் போது பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் சுதந்திரமாக கண்காணிக்கும் குழுக்கள் நியமிக்கப்படவேண்டும் எனவும் பங்குபற்றுனர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
வழிகாட்டல் கருத்தரங்கில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.