நாட்டின் வருமானத்தை விட செலவீனம் அதிகரித்து இருப்பதாகவும் அரச செலவீனத்தை கட்டுப்பத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) அமைச்சரவையில் நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை கவனத்துக்கு என்று நேற்றைய தினம் அமைச்சரவைக்கு விசேட அறிவித்தலை அனுப்பியிருந்தார்.
தேசிய வருமான திணைக்களம், சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் ஏனைய வருமான மார்க்கங்களினூடாக ஜனவரி மாதம் 158.7 பில்லியன் ரூபாய் வருமானம் நாட்டுக்கு கிடைத்துள்ளது.
இந்தத் தொகையில், சம்பளம் வழங்குவதற்காக 87.4 பில்லியன் ரூபாயும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுக்காக 29.5 பில்லியன் ரூபாயும் ஏனைய செலவீனங்களுக்காக 10.8 பில்லியன் ரூபாயும் கடன் கொடுப்பனவுக்காக 377.6 பில்லியன் ரூபாயும் செலுத்த நேர்ந்துள்ளது.
எனவே ஜனவரி மாதத்துக்கான மொத்த செலவீனம் வருமானத்தைவிட அதிகரித்தே காணப்படுகின்றது.
திறைச்சேரி, மத்திய வங்கியினூடாக பெற்றுக்கொண்ட ஒத்துழைப்பின் மூலமே ஏனைய செலவீனங்களை சரிசெய்ய முடிந்துள்ளது.
நாட்டின் யதார்த்த நிலைமை இதுவாகும்.
வருமானத்தைவிட இரண்டு மடங்கு செலவீனம் காணப்படும்போது இந்த செலவீனத்தை நிர்வகிப்பதற்கு சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் பொறுப்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
செலவீனங்களை முடிந்தளவில் கட்டுப்படுத்தி நெருக்கடியான காலப்பகுதியில் முகங்கொடுப்பது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
நாட்டின் பொருhதார நிலைமை இதுவாகவே காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மார்ச் மாதமளவில் நாட்டின் வருமான மார்க்கம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கடந்த கால அரசாங்கங்களும் குறைந்த வருமானத்திலேயே அரச கருமங்களை ஆற்றியுள்ளன.