தமிழர் வரலாற்றின் தொல்பொருள் சான்றுகளை அடையாளப்படுத்துவது முயல்கொம்பாக மாறியிருக்கின்றது.
புதிய விகாரைகளை ஸ்தாபிக்கும் விவகாரம் தொடர்ந்தும் ஒரு பிரச்னையாக இருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில் பேராசிரியர் இந்திரபாலாவின் பெயரில் யாழ். பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
இந்த நிகழ்வில் பேசியிருக்கும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராசா, ‘தமிழர்கள் தனித்து இயங்கும் திறன் கொண்டவர்கள்’, என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழர்களுக்கென்று சில தனித்துவங்கள் இருக்கின்றனதான்.
அதில் முரண்பட ஒன்றுமில்லை.
ஆனால், தமிழர்களால், அரசியலில் தனித்துவமாக வெற்றியீட்ட முடிந்ததா – என்றால் பூச்சியமே பதிலாகக் கிடைக்கும்.
ஏனெனில், தமிழர்களின் முக்கால் நூற்றாண்டு கால – அதற்கு அப்பால் சென்று, இராமநாதன்களின் காலத்தையும் சேர்த்தால் ஒரு நூற்றாண்டு எனலாம்.
இந்தக் காலத்தில் தமிழர்களால் அரசியலில் வெற்றிபெற முடிந்ததா என்றால் எவரிடம் பதில் உண்டு? ஏன் தமிழர்களால் வெற்றிபெற முடியவில்லை? ஏன் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றனர்? யுத்தத்துக்குப் பின்னரான, கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக ஓர் இனப்படுகொலை
நடைபெற்றதாகக் கூறி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும்கூட, சிங்கள ஆட்சியாளர்களை இறங்கிவரச் செய்ய முடியவில்லை.
அரசியலமைப்பில் இருப்பதைக்கூட அமுல்படுத்தும் விடயத்தில் அவர்களிடம் இரந்து நிற்க வேண்டியிருக்கிறது! ஏன் இந்த நிலைமை? இந்த இடத்தில்தான் இந்திரபாலாவின் கூற்று ஒன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
‘பிரமாண்டமான இந்தியாவுக்கு அருகில் ஒரு குட்டித் தீவால் தனித்துவமாகத் தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால் அதற்கு இராஜதந்திரம் தேவை’ தமிழர்களின் தொடர் தோல்வியை புரிந்து கொள்வதற்கு இந்தக் கூற்று போதுமானது.
லலித் அத்துலத் முதலி ஒரு முறை கூறியிருந்தார், ‘எங்களின் பலம் எங்களுடைய மூதாதையர்கள் எங்களுக்கு அளித்த இராஜதந்திர ஆற்றலாகும்.’
மறுபுறம் நமது பக்கம் திரும்பினால், தமிழரின் இராஜதந்திர ஆற்றலோ பூச்சியம்.
தோற்றுக் கொண்டிருப்பதே தமிழர்களின் அரசியல் தலையெழுத்ததாக இருக்கின்றது.
இதற்கான காரணம் ஒன்றேயாகும்.
தமிழரின் மீட்பர்களாக முகம் காட்டிய மிதவாதிகளும் சரி -இயக்கங்களும் சரி – எதிரிகளை அதிகரித்துக் கொண்டிருந்தார்களே தவிர, உலகின் சூட்சுமங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தும் இராஜதந்திர கலையை கற்றுத் தேறவே இல்லை.
சூழ்நிலைகள் மாறுகின்றபோது நாங்களும் மாறவேண்டும் – என்னும் ஒரு சிறிய உண்மையைக்கூட தமிழ் அரசியல் தரப்புகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இராஜதந்திர ஆற்றலின்மையே தமிழர்களுக்கு தொடர்ந்தும் தோல்வியை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இராஜதந்திரத்தின் அடிப்படை பலம் என்னும் ஒரு கூற்று உண்டு. – ஆனால், அது சிங்களவர்கள் போன்ற சிறிய இனத்துக்கு பொருந்தாது.
ஏனெனில், உலகத்தை சிங்களவர்கள் பலம்கொண்டு எதிர்கொள்ளவில்லை.
ஏனெனில், அவர்களிடம் பலமில்லை.
ஆனால், தந்திரம் கொண்டு உலகை எதிர்கொள்கின்றனர் – வெற்றிபெறுகின்றனர்.
ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் அமெரிக்காவையும் ஏதோவொரு வகையில் கையாள்கின்றனர்.
ஒவ்வொருவரின் மூலமும் பெறவேண்டியதைப் பெறுகின்றனர்.
மேற்குலகின் மனித உரிமைகள் சார்ந்த அழுத்தங்களை சீனாவுடனான நட்பைக் கொண்டு எதிர்கொள்கின்றனர்.
மேற்குலகின் நகர்வுகள் ஒரு கட்டத்துக்கு மேல் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சிங்கள ஆளும் வர்க்கம் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தைக் கொண்டு அவர்களை சமாளிக்கின்றனர்.
இன்றுவரையில், சமதூரத்தில் ஒன்றுக்கொன்று முரண்பாடான தரப்புகளை நண்பர்களாகக் கொள்ளும் இராஜதந்தரத்தின் மூலம் நன்மைகளைப் பெற்றுவருகின்றனர்.
இதன் மூலம், பிரமாண்டமான இந்தியாவுக்கு அருகில் – மிகவும் அருகில் எட்டுக்கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் சூழலில் தனித்துவத்துடன் வெற்றிநடை போடுகின்றனர்.
இப்போது யார் தனித்துவமானவர்கள்?