கடந்த ஆண்டு நவம்பர் பத்தாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கின் பிரச்னைகளுக்கு எதிர்வரும் சுதந்திர
தினத்திற்கு முன்னதாக தீர்வு காணப்போவதாக அறிவித்தார்.
அப்போது அவர், வடக்கின் பிரச்னை என்றே அழுத்தம் திருத்தமாகக் கூறியதுடன், அவை என்ன என்ன பிரச்னைகள் என்றும் கோடிட்டுக்காட்டினார்.
கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணுதல் என்று பிரச்னைகளையும் பட்டியலிட்டார்.
‘வடக்குக்காக நாம் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டுள்ளோம்.
அதற்கான மதிப்பீடுகளும் எம்மிடமுள்ளன.
வடக்கில் புதுப்பித்தக்க சக்தி மற்றும் பசுமை ஐதரசன் பயன்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
திருகோணமலையில் அபிவிருத்திச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இவை யாவும் இலங்கையர்களாகிய நமக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன.
75ஆவது சுத்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தப் பிரச்னைகளை தீர்க்கவேண்டும்.’
இப்படித்தான் ஜனாதிபதி பேசினார்.
உடனேயே தமிழர் தரப்பில் இருந்து நம்பிக்கை கீற்றுக்கள் வெளிவந்தன.
ஜனாதிபதி அழைத்தால் என்ன பேசுவது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி ஆராய்ந்தன.
அவர்கள் ஜனாதிபதி செய்ய வேண்டும் என்று சொன்ன விடயங்களையே, தமது முதற்கட்ட கோரிக்கைகளாக முன்வைத்ததோடு, கூடவே அரசியலமைப்பு சட்டத்தில் தற்போதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை தொடரலாம்
என்றும் தீர்மானித்தன.
டிசெம்பர் பதின்மூன்றாம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்ததுடன் அவற்றை நிறைவேற்ற காலக்கெடுவும் விதித்தன.
பின்னர் இருபத்தியோராம் திகதி சம்பந்தனும் சுமந்திரனும் ஜனாதிபதியைச் சந்தித்து கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்று பேச்சு நடத்தி முடிவுகளையும் வெளியிட்டிருந்தனர்.
இடையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்து சென்ற பின்னர், இந்த பதின்மூன்றை அமுல்படுத்துகின்ற விடயத்தை ஜனாதிபதி திடீரென்று கையில் எடுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.
ஆனால், அதன் பின்னணியை அறிய அரசியல் ஆய்வு தேவையில்லை.
திடீரென்று கடந்த வியாழனன்று அனைத்துக் கட்சிகளையும் பேச்சுக்கு அழைத்த ஜனாதிபதி, காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட பதின்மூன்றில் உள்ள
அனைத்து அதிகாரங்களையும் வழங்கப்போவதாக அறிவித்து பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கின்றது.
அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான ஆளும் கட்சித் தலைவர்கள் காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு கடும் கண்ட
னத்தை தெரிவித்தபோதிலும், ஜனாதிபதி கடும் தொனியில் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்ற விடயங்களை நிறைவேற்றவேண்டியது ஒரு நிறைவேற்று அதிகரமுள்ள ஜனாதிபதியின் கடமை என்றும், வேண்டுமானால் பதின்மூன்றை ரத்துச் செய்யும் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி அதனை இல்லாமல் செய்யுங்கள், ஆனால் அது சட்டத்தில் இருக்கும்போது அதனை நிறைவேற்ற தான் தயங்கப்போவதில்லை என்று கடும் தொனியில் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பு வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடன் நடத்தவேண்டும் என்றும் பகிரங்கமாகவே
கூறிச்சென்றிருந்தார்.
இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை மூலம் பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை பெறவேண்டும்.
அதற்கான நகல் வரைவு தன்னிடம் தயாராகவே இருக்கின்றது என்று தமிழ் அரசின் எம்.பி. சுமந்திரன் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் பெப்ரவரி எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடும்போது அதற்கான பிரேரணையை சமர்ப்பித்து தேர்தலுக்கான முஸ்தீபை தமிழ்த்தரப்பே தொடக்கி வைக்கவேண்டும்.
ஜனாதிபதி பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துகின்ற வேலையை பார்க்கட்டும்.
நாம் தேர்தலுக்கான வேலையை தொடங்குவோம்.!
- ஊர்க்குருவி