மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில், சுகாதாரமற்ற முறையில், மனித பாவனைக்கு பொருத்தமற்ற, எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காகவும் வைத்திருந்த, பிரபல உணவகத்திற்கு எதிராக, இன்று, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால், மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பிரபல உணவு விற்பனை நிலையத்தில், சுகாதாரமற்ற, மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுளை களஞ்சியப்படுத்தியும், விற்பனைக்காகவும் வைத்திருப்பது தொடர்பாகவும், உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் காணொளி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு, பாவனையாளர் ஒருவரால் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் பேரில், குறித்த உணவு கையாளும் நிறுவனம் ஒன்று, நேற்று, மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது, சுகாதாரமற்ற முறையில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காக வெளிக்காட்டியும் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இன்று, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமைக்கு அமைவாக, உணவக உரிமையாளருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில், ஒவ்வொரு குற்றத்துக்காகவும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை, வியாபாரத்தையும் தடை செய்து, நீதவான் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களையும் அழிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.