உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுணட் ஒவ் 16 சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுணட் ஒவ் 16 சுற்று போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து அவுஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி முக்கிய வீரர் டீ மரியாவை களமிறக்கவில்லை. ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆனால் அர்ஜென்டினா அணியின் பலத்தை கணித்து அவுஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இந்நிலையில் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு, ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. பீரி கீக் வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்தார். 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. அதன் பின்னர் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் அவுஸ்திரேலியா அணியின் கோல்கீப்பர் மேட் ரியான் செய்த தவறால், அர்ஜென்டினா அணி ஆல்வரஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் அவுஸ்திரேலிய அணியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தது. இதன் பலனாக 77வது நிமிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் குட்வின் அடித்த பந்து அர்ஜென்டினா அணி ஃபெர்னான்டஸ் காலில் பட்டு சொந்த கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பானது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வர, கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில்
அர்ஜென்டினா அணி மூன்றாவது கோலை அடிக்க முயற்சித்த போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இதேவேளை முன்னதாக இடம்பெற்ற ரவுணட் ஒவ் 16 சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் வெற்றிபெற்று நெதர்லாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற முதல் விலகல் சுற்றுப்போட்டியில் மூன்று முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியும், அமெரிக்க அணியும் மோதிக்கொண்டன. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்கள் அமெரிக்க அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். ஆனால் டம்பிரிஸ் கொடுத்த கிராஸை சிறப்பாக கணித்து ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டெபாய் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் நெதர்லாந்து வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அமெரிக்க கோல் கீப்பரின் சாதுர்யத்தால் அம்முயற்சி தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், நெதர்லாந்து வீரர் பிளிண்ட் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் அமெரிக்க அணி கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதற்கேற்ப அடுத்தடுத்து கோல் அடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதனை அமெரிக்க வீரர்கள் தவறவிட்டனர். இறுதியாக 76வது நிமிடத்தில் பொலிசிக் கொடுத்த பாஸில், அமெரிக்க அணியின் ரைட் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பரபரப்பை அடுத்த 5 நிமிடத்திலேயே நெதர்லாந்து தணித்தது. 81வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டம்பிரிஸ் அந்த அணிக்காக மூன்றாவது கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து இரண்டாம் பாதியில் கூடுதல் நேரம் வழங்கியும் அமெரிக்க அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதன்மூலம் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அந்த வகையில் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டின அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.