விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை என மக்களால் இன்றுவரை அழைக்கப்படும் புளோரன்ஸ் நைற்றிங் கேல் அம்மையார் நினைவாக இன்று(12.05.2022) உலக தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
மின்சாரம் கண்டுபிடிக்காத அந்த இரவு வேளைகளில் போரிலே காயப்பட்டு உயிருக்காகப் போராடிய நேரங்களில் கைகளிலே விளக்குகளை ஏந்தி நோயாளிகளை அன்புடனும், அரவணைப்புடனும் காயங்களிலிருந்து குணப்படுத்தி விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை என மக்களால் இன்றுவரை அழைக்கப்படுபவரே புளோரன்ஸ் நைற்றிங் கேல் அம்மையார் ஆவார்.
இவரே தாதியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன்முதலாக ஆரம்பித்தவராவார்.
இதனாலேயே 1965ஆம் ஆண்டு முதல்இந்த விளக்கேந்திய பெருமாட்டியின் பிறந்த தினமான மே 12ஆம் திகதி உலக தாதியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
ஆரம்பகால வாழ்க்கை
இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் 1820ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் பிறந்த இடத்தின் பெயரையும் இணைத்து புளோரன்ஸ் நைற்றிங் கேல் எனப் பெயரிட்டனர். கிறிஸ்தவரான நைற்றிங்கேல் கடவுளால் இடப்பட்ட சேவை எனக் கருதி தாதியர் சேவையினைத் (செவிலியர்) தொடர்ந்தார்.
தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆகியோர் ஆவார். தாதியர் சேவையில் ஈடுபட விரும்பிய புளோரன்சுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கவில்லை. எனினும், எதிர்ப்பையும் மீறி 1837ஆம் ஆண்டிலிருந்து தாதியர் சேவையில் தன்னை இணைத்துக்கொண்ட போதிலும், 1846ஆம் ஆண்டு முதல் தாதியர் சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார்.
ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் என்னைக் கவர்ந்த்து அதுவே தாதியர் சேவைக்கு என்னை ஈடுபடுத்தியது என அவர் குறிப்பிடுகின்றார்.
1851ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் தொழிலில் அவர் தன்னை முளுமையாக ஈடுபடுத்தினார்.
வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்த இவர், 1844ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானியாவிலுள்ள ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக போராடினார்.
கிரிமியன் போரும் “விளக்கேந்திய பெருமாட்டியும்“
1854-56 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசு ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியனில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.
இடைவிடாது, இரவு பகல் பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும், தேற்றி வந்ததுடன், இரவு நேரங்களில் வலிதாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களைக் கையில் இலாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு சுகம் விசாரித்து அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, அவர்களைப் பற்றிய தகவலைத் திரட்டி அவர்தம் குடும்பத்தினர்க்குத் தகவல் சொல்லி அவர்களின் மனச்சுமையை போக்கி இராணுவ வீரர்களை விரைந்து குணப்படுத்தினார்.
இதை கண்ட இராணுவ வீரர்கள் ‘தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர்; விளக்கேந்திய பெருமாட்டி என வர்ணித்தனர். அன்றிலிருந்து இவர் “விளக்கேந்திய பெருமாட்டி“ என அழைக்கப்பட்டார்.
இந்தப் போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. செய்திச் சேவை அறிவித்தது.
ஆண்டு தோறும் பிரித்தானியாவில் அம்மையாரின் நினைவு நாள்
1883-ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாருக்கு செஞ்சிலுவை விருதும், 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய மன்னரின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக விக்டோரிய மகாராணியினால் கௌரவிக்கப்பட்டார்.
சாதாரண மருத்துவ சேவையில் துவங்கி, காலரா போன்ற கொடிய கொள்ளை நோய் பரவி இருக்கும் இடங்களிலும், யுத்த பூமியிலும் துணிவுடன் பணியாற்றி வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் 13.8.1910 ஆம் ஆண்டு உலக வாழ்க்கையைத் துண்டித்து மரணம் அடைந்தார்.
அவர் நினைவாக ஆண்டுதோறும் அவர் பிறந்த மே12 ஆம் நாளில் பிரித்தானியாவிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே அரங்கிலுள்ள மாளிகையில் அங்குள்ள செவிலியர்களால் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்நாளில் வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது.
“ஒரு செவிலியரிடமிருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாக ஆண்டுதோறும் உணர்வுப் பூர்வமான விழாவாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது