இது அரசியல் செய்யும் நேரம் இல்லை எனவும் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் எனவும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், உள்ளூராட்சிமன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சிமாறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு வேதனமும், சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை எப்படி நிர்வகிப்பது? அதேபோன்று உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்தும். ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் ஊடாக நிலையான ஆட்சியை ஏற்படுத்தலாம். அவ்வாறானதொரு தேசிய மட்ட தேர்தலே ஏற்புடையதாக இருக்கும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிறிய தேர்தல் மேலும் சுமையாகவே அமையும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.