பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும் தனது கணவர் குறித்து உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக “நவ்ஜோத் சிங் சித்து செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது உங்களை விட அதிகமாகத் துன்பப்பட வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்கும் முயற்சியாக இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது மோசமானது என்று தெரியும்.
மீண்டும் மீண்டும் நீதி மறுக்கப்படுவதைக் கண்டு உங்களுக்காகக் காத்திருந்தேன். உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது ஆனால் அது உங்களை மீண்டும் மீண்டும் சோதிக்கும். மன்னிக்கவும் உங்களுக்காக காத்திருக்க முடியாது ஏனெனில் எனக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளது. இன்று அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் இது கடவுளின் திட்டம். அது சரியானதாகத் தான் இருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.