27 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஒஸ்ரியத் தலைநகரில் வெடித்தது ஆயுததாரிகள் – பொலீஸ் சமர்!

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.
பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் நேற்றரவு இரவு 8 மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயதபாணிகளுடன் பொலீஸார் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. நகரில் ஆறு இடங்களை ஆயுதபாணிகள் இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் என்று பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு உடை அணிந்த ஒருவர் நீளமான இயந்திரத் துப்பாக்கியுடன் ஓடுகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் இதனை “ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்று தெரிவித்திருக்கிறார். தப்பி ஓடிய ஆயுதபாணி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்காக வீயன்னா நகரப் பகுதி முற்றுகையிடப்பட்டிருப்பதாக இதனை எழுதும் போது தகவல் வெளியாகியது.
நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. வேட்டுச் சத்தங்களால் பீதியடைந்த பலரும் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வீயன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
“நெருக்கடியான இந்தத் தருணத்தில் பாரிஸ் மக்கள் வீயன்னாவின் பக்கம் நிற்கின்றனர் ” என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.
“பிரெஞ்சு மக்கள் தங்களது நட்பு நாடான ஒஸ்ரிய மக்களோடு அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்” என்று அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
” பிரான்ஸை தொடர்ந்து ஒரு நட்பு நாடு தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐரோப்பியர்கள். யாருடன் மோதுகிறோம் என்பதை எதிரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் எதனையும் விட்டுவிடப் போவதில்லை “-என்றும் மக்ரோன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வீயன்னா நிலைவரத்தை எலிஸே மாளிகை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று இங்கே பாரிஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles