டயகம சிறுமியின் விடயத்தில் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பொலிஸார் துணைபோயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் பிரதான காரியாலயத்தில், இன்று (1) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெற்றுக்கொண்டு அவை தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பொலிஸார் கொழும்பு உட்பட பல நகரங்களுக்கு சென்று வீட்டு பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இது குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு செயலாகவே நான் பார்க்கின்றேன்.
ஏனெனில் இவ்வாறு முன் அறிவித்தல் விடுத்த பின்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலமாக குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாது. முன் அறிவித்தல் இல்லாமல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டால் மாத்திரமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்.
எனவே குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதறற்கான சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு அவர்களை தேடிச் செல்வது என்பது வெறுமனே கண்துடைப்பான ஒரு செயலாகவே கருத வேண்டியுள்ளது.
பாடசாலையைவிட்டு இடைவிலகும் மாணவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இதனை கட்டுப்படுத்தலாம். மேலும் பெற்றோர்களும் பொறுப்பு கூறலில் இருந்து விலகிவிட முடியாது. தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன.
மதுபான விற்பனைக்கு எதிராக போராடுவதற்கு மலையகப் பெண்கள் தயாராக வேண்டும்.
நான் மலையகத்தின் நீண்டகால அரசியல்வாதியாக இருந்தாலும் எனக்கும் மதுபான விற்பனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
எனவே இவ்விடயம் தொடர்பாக என்னால் துணிவாகவும் நேர்மையாகவும் பேச முடியும். இவ்வாறானதொரு முடிவிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைவரும் உள்ளனர். நாங்கள் யாரும் மதுபான விற்பனையிலோ அல்லது அது தொடர்பான செயற்பாடுகளிலோ ஈடுபடுபவர்கள் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.