முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பிரதாயத்திற்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள ஹொரகொல்ல, பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் அச்சிடப்பட்ட பதாகையை தரையில் வீசி தேங்காய்களை வீசி கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.