அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் தமக்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தமக்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென்ற வலியுறுத்தி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.
முதலில் முச்சக்கர உரிமையாளர்கள் சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் தமது முச்சக்கர வண்டிகளை நீண்ட வரிசையில் நிறுத்தி விட்டு தங்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும், அவர்களுக்கான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்கிருந்து கோசமிட்டவாறு தமது முச்சக்கர வண்டிகளை தள்ளிக் கொண்டு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகத்தை அடைந்து சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்கை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.சம்சுதீனை சந்தித்து அவரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
மகஜர்களை கையளிக்கும் போது தங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்குரிய இலகு நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர்கள் முச்சக்கர வண்டிக்காரர்களின் மகஜரை ஏற்றுக் கொண்டதோடு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆவணை செய்வதாகவும் தெரிவித்தனர்.