இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
மறுபுறும், அதனை எதிர்ப்பதற்கான ஏற்பாடுகள் தமிழ் சூழலில் இடம்பெறுகின்றன.
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்கள் விரும்பிக் கொண்டாடும் சூழல் இல்லை.
இலங்கை சுதந்திமடைந்ததாகச் சொல்லப்படும் காலத்திலிருந்து இதுதான் நிலைமை.
ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சுதந்திர தினத்திற்கு எதிராக, அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்வது வருகின்றனர்.
ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் அப்போதிருந்த சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திர தினங்களில் பங்குகொண்டிருந்தது.
சம்பந்தனும் சுமந்திரனும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்குகொண்டிருந்தனர்.
ஆனால் இன்றோ, ரணில் தலைமையிலான சுதந்திர தினத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது.
அன்றைய ரணில் தலைமையிலான சுதந்திர தினத்தை ஆதரித்த தமிழரசு கட்சி, இன்றைய ரணிலின் சுதந்திர தினத்தை எதிர்க்கப்போவதாக கூறுகின்றது.
2015இல் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் தீவிரமாக இருந்த போது, கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனும் சுமந்திரனுமே விடயங்களைக் கையாண்டிருந்தனர்.
ரணில், சந்திரிகா ஆகியோர் மீது அதீத நம்பிக்கையை சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒரு கட்டத்தில், இப்போதும் கூட, எங்களை நம்புகின்றீர்களா மிஸ்டர் சம்பந்தனென்று சந்திரிகா குமாரதுங்கவே, கேட்குமளவிற்கு, சம்பந்தனும் சுமந்திரனும் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர்.
பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, மைத்திரி பால சிறிசேன செயற்பட்ட போது, ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாகவே சம்பந்தனும் சுமந்திரனும் நின்றனர்.
இந்தக் காலத்தில் சுதந்திர தினத்தை எதிர்த்து ஒரு நிகழ்வைக்கூட தமிழரசுக் கட்சியினர் முன்னெடுக்கவில்லை.
ஆனால் இப்போது அதனை எதிர்க்கப் போவதாக கூறுகின்றனர்.
சுதந்திர தினத்தை எதிர்பதாயின் அது கொள்கைசார்ந்த நிலைப்பாடாக இருக்கவேண்டும்.
சிங்கள ஆளும் தரப்போடு தேனிலவில் இருக்கும்போது, அதனை ஆதரிப்பதும், பின்னர் ஆளும் தரப்போடு முரண்பட்டுக் கொண்டதும் சுதந்திர தினத்தை எதிப்பதாகவும் இருக்கக் கூடாது.
ஏனெனில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எவையுமே இதுவரையில் வெற்றியளிக்கவில்லை.
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதைக் கூட தென்னிலங்கை சிங்கள கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கையின் சுதந்திர தினமானது, பெரும்பான்மை சிங்களவர்களுக்கானதொரு விடயமாகவே இருக்கின்றது.
தமிழ் மக்கள் தங்களை இலங்கையர்களாக இதுவரையில் கருதவில்லை.
தமிழ் மக்கள், அவ்வாறு உணரக் கூடியதொரு அரசியல் சூழலும் இதுவரையில் உருவாகவில்லை.
இதுவரையில் இலங்கைத் தீவை மாறி, மாறி ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ் மக்களை சம பிரஜைகளாக உள்வாங்கக் கூடியவாறான அரசி
யல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.
தமிழ் மக்களின் சமத்துவத்திற்கான கோரிக்கைகள் அனைத்தையுமே எதிர்த்தே வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தின எதிர்ப்பை எவருமே தவறென்று கூறமுடியாது, ஆனால், அந்த எதிர்பை தங்களின் தேர்தல் அரசியல் நோக்கில் கட்சிகள் கையாளக்கூடாது.
தமிழ் தேசிய கட்சிகள் ஆகக் குறைந்தளவிலாவது மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாக இருக்க நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு முறை சுதந்திர தினத்தை கொண்டாடுங்களென்று கூறுவதும், பின்னர் எதிர்க்குமாறு கூறுவதற்கு மக்கள் ஆட்டு மந்தைகளல்ல.