மீண்டும் போராட்டங்கள் துளிர்விடுகின்றன. போராட்டங்களுக்கான சூழல் இருக்கும் வரையில், இந்த நிலைமையை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரையில், தமது போராட்டங்கள் தொடருமென்று, கோட்டா கோ – கம ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஜனாதிபதியோ தான் தோல்வியடைந்த ஜனாதிபதியாக செல்ல விரும்பவில்லை – 69 இலட்சம் மக்களின் ஆணையின் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் நான், எனது பணிகளை நிறைவு செய்துவிட்டுத்தான் வெளியேறு வேனென்று கூறிவருகின்றார். ஜனாதிபதியின் கனவு ஈடேறுமா?
ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதில், இன்னும் முழுமையான வெற்றியை, பெறமுடியவில்லை. 21ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் இழுபறிநிலையிலேயே இருக்கின்றது. 21ஆவது திருத்தச்சட்டம் நிறை வேறும் வரையில் ஒரு ஸ்திரமான அரசாங்கம் உருவாகுவதற்கான வாய்ப்பில்லை. ஒருவேளை, 21ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறாது போனால், இந்த அரசாங்கம், ஒரு தளம்பல் நிலையிலேயே இருக்க
நேரிடும். அரசாங்கம் தளம்பல் நிலையில் இருக்கின்றபோது, அர சாங்கத்துக்கு எதிரான போராட்டங்களும் அவ்வப்போது வெளிக்கிளம்பும். இதனை தவிர்க்க முடியாது. ஏனெனில், பொருளாதார நெருக்கடி தீவிரமாக இருக்கின்றபோது, அரசாங்கம் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்றுவரையில் தீர்க்கப்படவில்லை.
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் எவருமே சந்திக்காத நெருக் கடிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்கொண்டிருக்கின்றார். இத்தனைக்கும் சிங்கள மக்களின் வரலாற்று தலைவனாக வேண்டு மென்னும் கனவோடு அதிகாரத்தை கைப்பற்றியவர். ஆனால், இன்றோ, ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியென்னும் பெயரோடு, போய்விடக் கூடாதென்னும் கவலையோடு, நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றார்.
ராஜபக்ஷ குடும்பத்தைப் பொறுத்தவரையில் தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் என்னும் வகையில், அனைத்து ராஜபக்ஷக்களின் தவறுகளையும் சுமக்க வேண்டிய இக்கட்டு நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய இருக்கின்றார். மகிந்த ராஜபக்ஷ வெளியேறியதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இப்போது பேசுபொருளாக இல்லை. பஸில் ராஜபக்ஷவும் இப்போது பேசுபொருளாக இல்லை. பொரு ளாதார நெருக்கடியில், நிதியமைச்சகராகவிருந்த, பஸில் ராஜபக்ஷவுக்கு பிரதான பங்குண்டு. ஆனால், அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, பஸில் ராஜபக்ஷவின் தவறுகளையும் ஜனாதிபதியே சுமக்க வேண்டியேற்பட்டி
ருக்கின்றது. அனைத்து ராஜபக்ஷக்களினதும் தோல்வியை சரிசெய்து, ஒரு வெற்றிபெற்ற ஜனாதிபதியாக வெளியேற முடியுமா?
ஆனால், ஒரு விடயங்களை செய்துவிட்டு, மாறுபட்ட ஜனாதிபதியாக வெளியேறுவதற்கான வாய்ப்பும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இல் லாமலில்லை. சந்திரிகா குமாரதுங்க காலத்திலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் பிரஸ்தாபிக்கப் பட்டது. ஆனால், நடைபெறவில்லை. இப்போதும் பேசப்படுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க வேண்டுமென்னும் வாதம், இன்று, சற்று வலுவாகவே எழுந்திருக்கின்றது. சஜித் பிரேமதாஸவும் அதனை ஆதரிப்பதாகக் கூறுகின்றார். ஆனால், ஒருவேளை, அவர் அதிகாரத்துக்கு வந்தால், அது நடக்குமா என்பது கேள்
விக்குறிதான்.
சந்திரிகாவும் அப்படித்தான் கூறியிருந்தார். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும் அது கிடப்புக்கு சென்றுவிட்டது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை உண்மையிலேயே கையிலெடுத்தால், தற்போதுள்ள ஆதரவு சூழலைப் பயன்படுத்தி நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாமலாக்கலாம். இது நடந்தால், கோட்டாபய ராஜபக்ஷதான், கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பார். ஒரு புதிய வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர் கோட்டாபய என்னும் பெயருடன் அவர் விடைபெற முடியும். இதற்கு அவர் தயாராக இருக்கின்றாரா? வேறு என்ன விடயங்
களை செய்தாலும், அவரை தூக்கிநிறுத்தும் வகையில் அப்படியொன்றும் அதிசயங்கள் நடந்துவிடப்போவதில்லை. இங்கே குறிப்பிடப்பட்டது போன்று,
சில வரலாற்று தீர்மானங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டால், ஒருவேளை அவரின் கனவு நிறைவேறவும் கூடும்.