கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 50,994 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைத்தடுத்தலை மீறுவோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் பகுதிகளில், 3,401 பேரும் அவர்கள் பயணித்த 2,584 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அனுமதியின்றி மாகாணத்தை விட்டு வெளியேற மற்றும் உட்பிரவேசிக்க முற்பட்ட 293 பேர் அவர்கள் பயணித்த 139 வாகனங்களிலேயே திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலுள்ளதால் அது தொடர்பில் கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.