பதுளை-ஹாலி-எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையைக் கடக்க முயன்ற நிலையில் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஏழு வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போன பத்து வயது சிறுவனை தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. வேலைக்குச் சென்ற தாயைத் தேடிச் சென்ற இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தாயார் பக்கத்து வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதை அறியாத பிள்ளைகள் தமது தாய் வீட்டிற்கு வர தாமதமானதால், பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது, அவரைத் தேடி வெளியே சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிஹில்லா கந்துரா என்ற நீர்ப்பாதையைக் கடக்க முயன்றபோது நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதனை அறியாத, பிள்ளைகளின் தாய் மாலை வீடு திரும்பியபோது, தனது பிள்ளைகளை காணாத நிலையில் அவரும் ஊர் மக்களும் ஒன்று திரண்டு காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குறித்த சிறுவர்கள் பயன்படுத்திய குடை, நீரோடைக்குச் செல்லும் பாதைக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்து.
இந்தநிலையில் காவல்துறையினரும் இராணுவமும் இணைந்து தீவிர தேடுதல்களை மேற்கொண்டு ஏழு வயதுச் சிறுமியின் உடலத்தை நேற்று இரவு வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு நீர்வழிப்பாதையில் மீட்டுள்ள நிலையில் 10 வயதுச் சிறுவன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.