திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட 22 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 10 வட்டாரங்களில் உள்ளுர் உற்பத்திகளை மேம்படுத்தி சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தலா 3மில்லியன் பெறுமதியான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வாழ்வாதார அபிவிருத்திக்கு 40வீதமும் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கு 40வீதமும் சூழல் மற்றும் அபிவிருத்திக்கு 10வீதமும் சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்திக்கு 10 வீதமும் என நிதி பங்கீட்டின் ஊடாக கிராம மட்ட அபிவிருத்திக்காக உத்தேச முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்பு உப குழு கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான டபிள்யூ டி வீரசிங்க பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் சமூர்த்தி தலைமை முகாமையாளர் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.