திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்திருந்த போதிலும் தமக்கு போதிய அளவிலான எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பாக பேருந்துகளைக் நிறுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
முன்னதாக நாளொன்றுக்கு 2500 லிட்டர் டீசல் வழங்கப்படுவதாக டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது நாளொன்றுக்கு 750 லிட்டர் டீசல் வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பாக தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே, ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்கள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல மணி நேரம் பேருந்துகளுக்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.