இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது சுகாதார விதிமுறைகளை மீறி நடந்துக்கொண்டமைக்காக இலங்கைக்கு மீண்டும் திருப்பியழைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களை நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் இங்கிலாந்திலுள்ள டர்ஹமில் உள்ள வீதிகளில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்
அத்துடன், அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
குறித்த கிரிக்கெட் வீரர்கள் உயிர்க்குமிழி (பயோ பபுள்) விதிமுறைகளை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பிய மூவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தலுக்கான செலவீனங்களை அவர்களிடமிருந்தே அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.