உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது, உலகின் சில வளர்ந்த நாடுகள் முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன, அதே நேரத்தில் இலங்கை அத்தகைய வயதான குடிமக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில நாடுகளில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களால் அந்த நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நமது நாடு செயல்படுத்தும் திட்டங்களால் நாட்டில் கொவிட் தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக்குடன், சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் செயல்படுத்தப்பட்ட வீட்டு கொவிட் சிகிச்சை திட்டம் நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டிற்கு மிக வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளது என்றும் இதனால் மருத்துவமனைகளில் தேவையற்ற நெரிசலைத் தவிர்ப்பதன் மூலம் நோயாளிகள் தங்கள் சிரமத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
வீட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளில் குறைந்தது 1.4வீதம் பேர் மாத்திரமே மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இலங்கை தற்போது கொவிட் தொற்றிலிருந்து வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது எனவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிக ஆதரவைப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான யுனிசெப்பின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கையில் கொவிட் நிலை மிக உயர்ந்த அமைப்பு மற்றும் நிர்வாகத்துடன் நிர்வகிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தடுப்பூசியின் வெற்றியை இப்போது இலங்கை நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.
அதேநேரம் எதிர்காலத்தில் இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் வெற்றிகரமான கொவிட் நிர்வாகம் குறித்து மேலும் கவனம் செலுத்துவது முக்கியம் என யுனிசெப் பிரதிநிதி கூறினார்.
இக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா குணவர்தன மற்றும் யுனிசெப் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் தம்மிகா ரோவெல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.