நுவரெலியா – நானுஓயா விபத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களின் சடலங்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் பேருந்து – வான் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று நள்ளிரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன. வானில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோரின் பூதவுடல் நள்ளிரவு 12:10 மணியளவில் ஹட்டன் – டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு இறுதி அஞ்சலிக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். பள்ளிவாசலில் சடலங்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, ஐந்து சடலங்களதும் முகங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் ஹட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.