நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் அச்சுறுத்தப்படுவது என்பது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் அச்சுறுத்தப்படுவது தெரிகின்றது. நீதித்துறையை பயன்படுத்தி அவரை தவறிழைத்தவராக காண்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முயற்சித்த பலரில் நிதி அமைச்சின் செயலாளரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
அவ்வாறான ஒருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்போது நாட்டின் பொருளாதாரத்திலேயே அது தாக்கம் செலுத்தும்.
அவர் சிந்திக்கும் விடயம், தீர்மானம் எடுக்கும் விடயங்களில் இவ்வாறான அழுத்தங்கள் தாக்கம் செலுத்தும்.
இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது சிறந்ததல்ல.
நாடு தற்போது மீண்டெழுந்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது நாட்டை மீண்டும் அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாகும்.
இந்நாட்டில் வரிசை யுகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இல்லாமல் செய்தார். நாட்டு மக்களால் ஒரு வேளை உணவைக் கூட உண்ண முடியாத நிலைமை நாட்டில் காணப்பட்ட நிலையில் அதனை மாற்றி இரண்டு வேளைகளேனும் உணவை உட்கொள்ளும் நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தினார்.
ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்பட்டனர். இவை மிகச் சிறந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளாகும்.
எனவே நாடு மீண்டெழுந்து வரும் நிலைக்கு வந்துள்ள போது அதனை தடுப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினால் ரணில் விக்கிரமசிங்க என்பவர் தலைச்சிறந்த வீரராகிவிடுவார். அவரை வீரராக்க முடியாது. அரசியல் செய்வதற்கு நாடு வேண்டும். அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கான அரங்கை தாருங்கள் என்பது போலவே சிலரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.