நுவரெலியாவில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று (1) காலை முன்னெடுத்தனர்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு கோரியும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியும் நாடு பூராகவும் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் சேவை சங்கங்களின் ஏற்பாட்டில் நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானதுடன் வெலிமடை வீதி வழியாக தர்மபால சந்தி, புதிய கடை வீதி, எலிசபத் வீதி வழியாக வந்து பிரதான தபால்நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த இலங்கை கல்விச் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவண்ணன்,
மாணவர்களுக்கான இலவசக்கல்வி உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்திருக்கின்றோம். அந்தவகையில் இலவசக் கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தையும் எதிர்க்கின்றோம். ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர், பெற்றோர்களைத் துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இலவசக் கல்வியை காக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம். நிகழ்தகை கல்வியில் இருந்து தற்போது விலகியுள்ளோம். நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.