நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்கக்கூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், ‘நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புகையிரத சேவை தேவையாக உள்ளது.
எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் நிலையத்திற்கிடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும். நுவரெலியாவிலிருந்து கொழும்புவரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்றும் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதேவேளை, நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல வரை செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடியதோடு ரயில் நிலைய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.