நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம், முன்வைத்துள்ள யோசனைகளை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் பீரிஸ் நாட்டின் தற்போதைய நிலைமை, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட இணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலை குறித்து வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையால், இலங்கைக்கு வழங்கப்படும் உடனடி உதவிகளில் பெரும்போகத்துக்கான யூரியா, மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் பாடசாலைகளுக்கு ஊட்டமளிக்கும் வேலைத்திட்டம் என்பனவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.