பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஆளும் தரப்பு கவனம் செலுத்தியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி முன்வைக்கும் என அரச தரப்பின் உயர்வட்டாரங்கள் மூலம் அறிய வருகிறது. மின்சார கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இடமளிக்காத நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தம்மை பதவி நீக்க முன்னர் மின்சாரத்துறை மற்றும் அமைச்சர் காஞ்சன விஜயசேகரவை பதவி நீக்கி, துறைசார் திறன் கொண்ட ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயல்பட முடியும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி யோசனை முன்வைக்க வேண்டும். யோசனையை முன்வைக்காவிட்டால், ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மின்கட்டணத்தை அதிகரிக்க முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டது. அரசாங்கம் குறிப்பிடுவதை போன்று மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை விரைவாக முன்வைக்க முடியாது. குறைந்தபட்சம் 45 அல்லது 55 நாட்களேனும் தேவை. மின் உற்பத்திக்கு செலவாகும் உண்மை தொகையை மின்சாரத்துறை அமைச்சு முன்வைத்தால் மின்கட்டணத்தை நியாயமான முறையில் திருத்தம் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.