அம்பாரை பொத்துவில் பிரதேச செயலகத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் குறித்த கலந்துரையாடல் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தறுவன் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்படவுள்ள உணவுப் பஞ்சத்தில் இருந்து மீள வேண்டுமானால் அனைவரும் தமக்கான உணவு தேவைகளை உறுதி செய்துகொள்ளும் வகையில் வீட்டுத் தோட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என இதன்போது பிரதம செயலாளர் பி.துசித வணிகசிங்க
நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுவதை தடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் பாரிய கடமைப்பாடு கிராம மட்ட உத்தியோகத்தர்களான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு உண்டு என்பதுடன்
இத்திட்டத்தின் ஊடாக விசேட கொடுப்பனவுகளை வழங்கவும் தாம் தயாரகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் கமத்தொழில் அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் 16500 வீட்டுத் தோட்ட குடும்ப அலகுகளை உருவாக்கி அவர்களுக்கான விவசாய உபகரணங்கள் மற்றும் நாற்றுக்கள் பயிர் விதைகள் என்பன வழங்கப்படவுள்ளதுடன் ஒரு கிராம சேவையாளர் பிரிவில் இருந்து 100 தொடக்கம் 150 வரையான பயனாளி குடும்பங்களை இணைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில் லாகுகல திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி மாவட்டத்தில் சுமார் 4800 வீட்டுத் தோட்ட குடும்ப அலகுகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் சுமார் 30 குளங்களும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பி.துசித வணிகசிங்க பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தறுவன் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஜ.பிரனாஸ் மாகாண விவசாயப் பணிப்பாளர் நிறுவன அபிவிருத்தி நிபுணர் எஸ்.நவிந்திரதாஸ் பொத்துவில் திரக்கோவில் லாகுகல பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.