ஹபரண பகுதியில் விடுதியொன்றில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: ஹபரண பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, ஹபரண பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குருநாகல், திவுலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இந்த விடுதியிலிருந்து போலி தேசிய அடையாள அட்டைகள், வாகன இலக்கத் தகடுகள், வாகன வருமான அனுமதிப் பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ்கள், வாகன இயந்திரங்களுக்கான இலக்கங்களை அச்சிடும் உபகரணங்கள், அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இறப்பர் முத்திரைகள் மற்றும் 9 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இவர்களிடம் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்ட நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.