துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடக செயலாளர் கே.லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மகளிர் அணியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் விரைவான நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் முறையான சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதிகேட்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான போராட்டங்களை சிலர் இனத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்த முனைவதாக இங்கு கருத்து தெரிவித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடக செயலாளர் கே.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.