மட்டக்களப்பு,வெல்லாவெளி பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை வார நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்
யோ. ரஜனி ,உபதவிசாளர் நா.தருமலிங்கம் மற்றும் உறுப்பினர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது.
தவிசாளரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் சமூக நலம் விரும்பிகள் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வீதியால் சென்ற பாதசாரிகள் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்த பொது மக்களுக்கு தமிழின படுகொலையை நினைவுபடுத்தும் முகமாக முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்தத்தின் போது ஒரு வேளை உப்பு கஞ்சி அருந்தி உயிர்நீத்த உறவுகளை நினைவு படுத்தும் முகமாக உப்புகஞ்சி வழங்கப்பட்டது.
நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவுபடுத்தும் முகமாக கட்டப்பட்ட பதாதைகளை புகைப்படம், வீடியோ எடுத்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி உப்பு கஞ்சி வழங்கப்பட்டபோது கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புகைப்படம் வீடியோ எடுத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.