இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதனை நினைவு கூர்ந்து ஹற்றன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று நடைபெற்றது.
ஹற்றன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்த ஊர்வலம், ஹற்றன் நகர் ஊடாக ஹற்றன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது. ஊர்வலத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்? மலையக மக்களை சிதைக்காதே? உறுதியளித்த பல்கலைக்கழகம் எங்கே? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வரும்போது கொண்டு வந்த கலை அம்சங்களும் இதன்போது இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து அட்டன் டி.கே.டப்ளியு கலாச்சார மண்டபத்தில் கலை, கலாச்சார அம்சங்கள் இடம்பெற்றதுடன் அவர்கள் தொடர்பான விசேட கருத்துரையும் இடம்பெற்றன. தேசிய கிறிஸ்துவ குழு லங்கா சபை, மெதடிஸ்ட் தேவஸ்தானம் உட்பட அருட் தந்தையர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
குறித்த ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பொது மக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.